Tamilnadu

“சாதாரண அறிவு இருக்கிறவன் டாக்டர் ஆகலாமா?” : பா.ஜ.கவினரின் அருவருக்கத்தக்க நீட் ஆதரவு அரசியல்!

நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்த தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

தமிழ்நாடு அரசின் இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது. மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

அதை மீறும் வகையில் தற்போது தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. இது அனுமதிக்கத்தக்கதல்ல. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால் சாதாரண அறிவுள்ளவர்கள் கூட மருத்துவர்கள் ஆகிவிடுவார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பில் மிகச்சிறந்த மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேரும் ஏழை எளிய மாணவர்களை சாதாரண அறிவுள்ளவர்கள் எனச் சுட்டியிருப்பது கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

சமூக நீதி பற்றிய அடிப்படைப் புரிதலின்றி, சாதியவாத எண்ணத்தோடு, மருத்துவம் பயில விரும்பும் ஏழை எளிய மாணவர்களைக் கீழ்த்தரமாகக் குறிப்பிட்ட தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளரின் மனுவுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: “நீட் குழுவுக்கு எதிராக பா.ஜ.க வழக்கு... மாநில சுயாட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல்” : கொ.ம.தே.க ஈஸ்வரன்