Tamilnadu

பாரதி கண்ட புதுமை மாவட்டமான புதுக்கோட்டை : முக்கியப் பதவிகளை அலங்கரிக்கும் பெண் அதிகாரிகள் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெறும் கழக ஆட்சியில் பல்பேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி உள்ளிட்ட பல அதிகாரிகள் சமீபத்தில் பணியிட மாற்றம் சேய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து முக்கிய பதவிகளிலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள உமா மகேஸ்வரி மாற்றப்பட்டு, மற்றொரு பெண் ஆட்சியர் கவிதா ராமு நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதேப்போல், காவல்துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட நிஷா பார்த்திபன் நேற்று பொறுப்பேற்றார். கோட்டாட்சியராக அபிநயா, டி.எஸ்.பியாக லில்லி கிரேஷ் ஆகியோரும் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஏற்கெனவே காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக ரம்யாதேவி, காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளராக பி.கீதா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக மு.பூவதி, சிறை காவல் கண்காணிப்பாளராக ருக்மணி பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக த.விஜயலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலராக ரேணுகா, மாவட்ட தீயணைப்பு அலுவலராக பானுப்பிரியா, டாஸ்மாக் மாவட்ட மேலாளராக வசுந்தரா தேவி, மாவட்ட சுகாதார துணை இயக்குநராக பா.கலைவாணி, மாவட்ட தொழில் மைய மேலாளராக திரிபுரசுந்தரி போன்ற பெண்களே பணியில் உள்ளனர்.

மேலும், கூட்டுறவு இணைப் பதிவாளராக உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநராக பிஜெ.ரேவதி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநராக டி.கே.செண்பகவள்ளி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக உம்மல் கதீஜா, நபார்டு உதவி மேலாளராக ஜெயஸ்ரீ, அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வராக புவனேஸ்வரி பணிபுரிகின்றனர்.

துறைகளின் ஆய்வுக் கூட்டங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். பெண் விடுதலைப் போராளியும் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் பெண் ஆளுமைகள் முக்கிய பதவி வகிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Also Read: கடந்த 4 வருடங்களில் ரூ.7 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.. பெரு முதலாளிகளின் மனதை குளிர்விக்கும் மோடி அரசு!