Tamilnadu
"கொரோனா நிவாரணம் முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதத்திலும் பெற்றுக் கொள்ளலாம்” - தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2,000 பெறாதவர்கள் ஜூன் மாதத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும் கொரோனா நோய்ப் பரவல் சங்கிலியை உடைத்துப் பரவலை உடனடியாகத் தடுக்கும் பொருட்டு, 07.06.2021 வரை அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆணையிடப்பட்டு, செயலாக்கத்தில் உள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழலைக் கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் அரிசி குடும்ப அட்டைகள் பெறத் தகுதியுடையவை எனத் தணிக்கை மூலம் தீர்மானிக்கப்பட்டு குடும்ப அட்டைகள் விநியோகிக்க நடைமுறையில் இருந்த குடும்பங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக 15.05.2021 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 31.05.2021 முடிய இவற்றில் 98.4 சதவீதம் குடும்பங்கள் நிவாரண உதவித்தொகை பெற்றுச் சென்றுள்ளனர்.
மீதமுள்ள குடும்பங்களில் நோய்த்தொற்று காரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குச் சென்ற காரணத்தினாலும், முகவரி மாற்றம் செய்து போக்குவரத்து வசதியின்மை காரணமாக, நியாய விலைக் கடைக்குச் செல்ல இயலாத நிலையிலும் சில குடும்பங்கள் நிவாரண உதவித் தொகை பெற இயலவில்லை என, அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் அவர்களுக்கான நிவாரண உதவித்தொகை பெறும் வகையில், அத்தொகையினை ஜூன் 2021 மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அட்டைதாரர்கள் உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியினைப் பின்பற்றியும் தங்களையும் சமூகத்தையும் நோய்த்தொற்று அபாயத்திலிருந்து காத்துக் கொள்ளவும் நோய்த் தொற்று சங்கிலியினை உடைத்திடவும் உதவும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்” : விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்த முரசொலி!
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!