Tamilnadu

“பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?” - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்!

தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு கட்டணம் செலுத்துமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், சேலத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“சேலத்தில் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எங்களுக்கு தெரியவந்தது. அதன்படி கொரோனா பரிசோதனை செய்த 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவை வெளியிட முடிவெடுத்துள்ளோம். அவர்கள் குறித்த தகவல்களை கண்காணிக்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு தொற்றாளர்களுக்கு அட்மிஷன் அளிக்கப்படும்.

மக்களிடையே மின் கட்டணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. மின்கட்டணம் குறித்து ஏற்கெனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு சில மாற்று கருத்துகள் வந்ததால் முதல்வர் அளித்த வழிகாட்டுதல்படி மின்கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டோம். அதன்படி மின் கட்டணத்தை அளவிட உங்கள் வீட்டில் மின் கட்டண மீட்டரில் உள்ள யூனிட் அளவை மொபைலில் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்.

இரண்டு நாட்களுக்கு முன் ஆய்வுக்கூட்டம் நடத்தி ஒரு வாட்ஸ் அப் நம்பர் கொடுத்திருந்தோம். அந்த நம்பரில் அனுப்பினால் போதும். அதைவிட மின்கட்டணத்தை செலுத்தச் செல்லும்போது அந்த படத்தை எடுத்துச் சென்றால் போதும்.

அந்த நேரத்தில் எடுத்துச் சென்று இது என் மீட்டர் யூனிட் எனக்காட்டி அதற்கு ஏற்ப பணத்தை செலுத்தலாம். இப்போது ஒன்றும் அதில் அவசர தேவை ஒன்றும் இல்லை. அதற்கு கால அவகாசம் உள்ளது. மின் கட்டணம் செலுத்தச் செல்லும்போது எடுத்துச் சென்றாலே போதும்”. எனத் தெரிவித்தார்.

Also Read: தடையின்றி மின்சாரம் வழங்க வாட்ஸ் அப் கட்டணமில்லா புகார் எண் அறிமுகம் -அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு