Tamilnadu

“காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” : தமிழக அரசு எச்சரிக்கை!

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுவதால் காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழ் நாடு அரசு நாளை (24-5-2021) முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மக்களின் உயிர்காக்கும் பொருட்டும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க இயலாத இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்று ஒத்துழைப்பு தரும் இவ்வேளையில், சில வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையினை பயன்படுத்தி காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

இது மக்களை சுரண்டும் ஒருசெயல். இவ்வாறாக உயர்த்தப்பட்ட விலையினை உடனடியாக வழக்கமான விலைக்கு குறைக்க வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வாறு நடவடிக்கை ஏற்படும் சூழ்நிலை நிகழாத வண்ணம் வணிகர்களும் தனியார் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: 3 நாடுகளில் இருந்து 58 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் தமிழகம் வருகை.. போர்க்கால நடவடிக்கையில் தமிழக அரசு!