Tamilnadu

“முதல்வர் மு.க.ஸ்டாலினின் அணுகுமுறை வலுவான தமிழகத்தைக் கட்டமைக்கும்” : ‘தினகரன்’ தலையங்கம் புகழாரம்!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்லும், தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டு வரும் மாநில அரசின் மாறுபட்ட அணுகுமுறை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, டிவிட்டரில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து பதிலளித்த மு.க.ஸ்டாலின், ‘‘மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் வரவேற்பு குவிந்தது. கடந்த 7ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில் கூட, அ.தி.மு.க சார்பில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. ஒரே மேசையில் அவர்களுடன், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதும், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் நாகரிகம் தோன்றி உள்ளது என மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டை பெற்றது.

கொரோனா தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சியினர் கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில் அனைவரின் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு திட்டங்களை வகுத்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த உருவான முதல்வர் தலைமையிலான அனைத்துக்கட்சி குழுவில், அதிமுக தரப்பில் விஜயபாஸ்கருக்கு இடமளித்தது பலரது புருவங்களையும் உயரச் செய்துள்ளது. தேர்தல் பிரசாரங்களின்போது கடுமையாக விமர்சனம் செய்தாலும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர், டாக்டர் என்ற முறையில் விஜயபாஸ்கரையும் குழுவில் இணைத்த முதல்வரின் செயலை, பலரும் கட்சிப் பாகுபாடின்றி பாராட்டி வருகின்றனர்.

அது மட்டுமல்ல... அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திரபாலாஜி மற்றும் எம்.எல்.ஏக்கள் பலரும், தி.மு.க ஆட்சியமைத்த பின் கொண்டு வந்த மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயணம், ரேஷனில் கொரோனா நிவாரண நிதி, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான அரசின் துரித நடவடிக்கைகளை பாராட்டி பேசி வருகின்றனர்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, அரசு வழங்கும் நிவாரண திட்டங்களில், முதல்வரின் படம் இடம் பெற்றிருக்கும். ஆனால், தற்போது ரேஷனில் கொரோனா நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன் உள்ளிட்ட அரசின் எந்த திட்டங்களிலும் தமிழக அரசு முத்திரையே உள்ளது. முதல்வரின் படம் இடம் பெறவில்லை. எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துக்களையும் கனிவோடு கேட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்திற்கு இந்த அரசியல் பாதை புதியது தான். ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஒரு அரசு எடுக்கும் நல்ல திட்டங்களுக்கு, எதிர்க்கட்சிகளும் பக்கபலமாக செயல்பட்டால்,அது வலுவான தமிழகத்தை கட்டமைக்கும்.

Also Read: அன்பில் எழுப்பிய ஆவேசக் குரல்.. கொள்கை ரீதியாக நிர்வாக திருத்தம் செய்யும் தி.மு.க அரசு” : முரசொலி !