Tamilnadu

ஆக்சிஜன் லாரிக்காக இரவு 1 மணி வரை காத்திருந்து பணியாற்றி அமைச்சர் மற்றும் எம்.பி.. மதுரை மக்கள் பாராட்டு!

மதுரை அரசு ராஜாஜி கொரானா சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்தனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேரமும் அனைத்து பிரிவினருக்கும் தென் மாவட்ட முழுவதும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அங்கு சுமார் 1,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு நேற்று மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் லாரி இரவு 10 மணியாகியும் வரவில்லை. லாரியின் காலதாமதத்தை அறிந்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு உடனடியாக சென்று அங்கிருந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தார்.

இதனிடையே அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் மூர்த்தி அவர்களுடன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆக்சிஜன் லாரிக்காக அரசு மருத்துவமனை வாயிலில் காத்திருந்தனர்.

அவசரம் கருதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருவதால் உடனடியாக இங்கே ஆக்சிஜன் தேவை என ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தி நள்ளிரவு 1 மணி அளவில் சிலிண்டர் லாரி வரும் வரை மருத்துவமனை வாயிலில் இருவரும் காத்திருந்தனர்.

கொரானா மையத்தில் கொள்கலன் 8,700 கிலி ஆக்சிஜன் கொள்ளளவு கொண்டது. நள்ளிரவில் லாரியில் வந்த ஆக்சிஜன் கொள்கலனில் ஏற்றும் பணி நடைபெற்றது. ஆக்சிஜன் லாரி வருகை காலதாமதம் குறித்த காரணங்களை மருத்துவமனை முதல்வர் சங்குமணி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமாரி கூடுதல் ஆட்சியர் பிரியதர்ஷினி உள்ளிட்டோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.

1200 பேரின் சிகிச்சைக்கு அத்தியாவசியத் தேவை என்பதால் அரசு மருத்துவமனை வாயிலில் அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மற்றும் அதிகாரிகளும் ஆக்சிசன் லாரியை வரும்வரை நள்ளிரவில் காத்திருந்து மக்களுக்கு பணியாற்றியது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read: “உங்களது விடா முயற்சியும், சலியாத உழைப்பும் மக்களை மீட்கும்” : அ.அன்புச்செல்வன் புகழாரம்!