Tamilnadu

கர்ணன் திரைப்படம் வெளியாகியுள்ள தியேட்டர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு : போலிஸ் விசாரணை!

தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில், நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களின் 5 பேர் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து திருப்பி அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தியேட்டருக்குள் அனுமதிக்காததால் ஆத்திரத்தில், மீண்டும் தியேட்டருக்கு வந்த அந்த கும்பல், இரவு 11 மணியளவில் தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில், 5 மது பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வீசியதில் அது தரையில் விழுந்து வெடித்தது. ஆனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

இதனையடுத்து, இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்தை மாநகர டி.எஸ்.பி கணேஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தியேட்டரில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Also Read: “2 நாட்களில் தவறை சரிசெய்வதாக படக்குழு உறுதி” - ‘கர்ணன்’ சர்ச்சை குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!