Tamilnadu

பணத்திற்கு ஆசைப்பட்டு 7 வயது மகளை 10 லட்சத்துக்கு விற்ற கொடூர தாய்.. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் அவலம்!

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னபொண்ணு. இவர் நேற்றைய தினம் சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் தனது மகள் சுமதி, சீலநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற தொழிலதிபரிடம் தனது பேத்தியை விற்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலிஸார், தொழிலதிபரிடம் இருந்த சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே சிறுமியின் தாய் சுமதி, அவரது உறவுக்காரப் பெண்ணிடம், சிறுமியை விற்றது தொடர்பாகப் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், சிறுமியை 10 லட்சம் ரூபாய்க்கு தொழிலதிபரிடம் விற்றுவிட்டதாகவும், அவர் தனது மகளை நன்றாக பார்த்துக்கொள்வார் எனவும் பேசியிருந்தார்.

இந்நிலையில் சிறுமியின் தாய் சுமதி, தொழிலதிபர் கிருஷ்ணன் மற்றும் சிறுமியின் தந்தை மீது சதீஷ்குமார் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் போலிஸார் இளஞ்சிரார் பாதுகாப்பு சட்டம் 80, 81, மற்றும் 370(ஏ), குழந்தையை விற்பனை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து காவல்துறையினரும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகின்றனர். சொந்த மகளை தாயே பணத்திற்கு ஆசைப்பட்டு, விற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கர்ணன் திரைப்படம் வெளியாகியுள்ள தியேட்டர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு : போலிஸ் விசாரணை!