Tamilnadu

"சாம்பார் கேட்டதுக்கு தரலைல்ல... ரூ. 5000 அபராதம்” - கொடுமை செய்யும் காவல்துறை - வியாபாரிகள் புகார்!

காஞ்சிபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் காவலர் ஒருவர் இலவசமாக சாம்பார் கேட்டதற்கு தர மறுத்ததால், ஹோட்டல் நிர்வாகத்திற்கு போலிஸார் 5,000 ரூபாய் அபராதம் விதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 9ஆம் தேதி போலிஸ் ஜீப் டிரைவர் தன்ராஜ் இலவசமாக சாம்பார் கேட்டுள்ளார். அதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினர், “சாம்பார் சும்மா தருவதில்லை” எனக் கூறியுள்ளனர். இதனால் போலிஸுக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்தநாள் அந்த ஹோட்டலில், தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை எனக் கூறி உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அப்பொழுது அங்கு இருந்த போலிஸ் ஜீப் டிரைவர் தன்ராஜ், “500 ரூபாய் அபராதமா இவங்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் போடுங்க” எனக் கூறியதால் ரூ.5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் அந்தப் பகுதி வியாபாரிகள் புகார் ளித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர், அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதால் வியாபாரிகள், பொதுமக்களிடம் அடாவடியில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் காவல்துறையினரின் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருதியை ஏற்படுத்தி வருகின்றன. அரசு இதில் தலையிட்டு காவல்துறையின் கண்ணியத்தை நிலைநாட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read: பணத்திற்கு ஆசைப்பட்டு 7 வயது மகளை 10 லட்சத்துக்கு விற்ற கொடூர தாய்.. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் அவலம்!