Tamilnadu

வாக்களிக்க சொந்த ஊருக்குச் சென்றபோது ஏற்பட்ட சோகம்... நீச்சல் கற்றுத்தருகையில் கிணற்றில் மூழ்கி பலி!

திருப்பத்தூர் மாவட்டம், கசிநாயக்கன்பட்டி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் சென்னையில் கூலி வேலை செய்துவந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், கீர்த்தனா, ஜெகதீஷ் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் பாலாஜி, சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் பாலாஜி ஜெகதீஷுக்கு நீச்சல் கற்றுத்தர முடிவு செய்து, 5 லிட்டர் எண்ணெய் சேமிக்கும் பிளாஸ்டிக் கேனை எடுத்துக்கொண்டு தங்களது விவசாயக் கிணற்றுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, சிறுவன் ஜெகதீஷின் இடுப்பில் பிளாஸ்டிக் கேனை கட்டி நீச்சல் பழக கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென கயிறு அவிழ்ந்ததில் சிறுவன் நீருக்கு அடியில் சென்றுள்ளார். கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்திருந்த பாலாஜி இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே கிணற்றுக்குள் குதித்துள்ளார். அப்போது பாலாஜி சேற்றில் சிக்கியுள்ளார்.

சேற்றில் சிக்கிய பாலாஜி கூக்குரலிட்டுள்ளார். இவரது சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கிணற்றில் குதித்து பாலாஜி மற்றும் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: மாஸ்க் தவறுதலாக கழன்று விழுந்ததால் இளைஞரை அடித்து உதைத்த போலிஸார் - இந்தூரில் கொடூரம்!