Tamilnadu

“தலைவி வழியில் தொண்டர்கள்?”: சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 4 ஆண்டு சிறை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சின்னசேலம் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ‌ பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தொகுதியில் கடந்த 1991 முதல் 1996 வரை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பரமசிவம். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். அதன்படி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நிரூபிக்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்து, பரமசிவத்தின் சொத்துகளை அரசுடமையாக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பரமசிவம் அவருடைய மனைவி பூங்கொடி மகன்கள் மயில்வாகனம், பாபு ஆகியோர் உள்ள நிலையில், பூங்கொடி 2017ம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழலில் திளைத்துவரும் நிலையில், அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருப்பது ஆட்சியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “வீட்டில் ஒன்றுமில்லையாம்... வைக்கோல்போருக்குள் 1 கோடி ரூபாய்” - சிக்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ!