Tamilnadu

வீட்டின் உரிமையாளரை கொலை செய்துவிட்டு குடும்பத்துடன் தப்பி ஓடிய காவலாளி : சென்னை அருகே நடந்த பயங்கரம்!

சென்னை அடுத்த மாதவரம் அருகே தணிகாசலம் நகரைச் சேர்ந்த தம்பதியர் ரவி - கலைவாணி. இவர்கள் தணிகாச்சலம் நகரில் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். கணவர் ரவி சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வந்த பாபு என்பர், தம்பதிகளுடன் நண்பராக பழகியுள்ளார். இதனால், அவரிடம் “வீட்டிற்குக் காவலாளி வேலைக்கு ஆள் ஒருவர் தேவை, அதனால் யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என கூறியுள்ளனர்

இதையடுத்து பாபுவும், பெங்களூருவில் உள்ள தனது நண்பர் ராகேஷ் என்பவரை சில தினங்களுக்கு முன்பு ரவி வீட்டில் காவலாளி பணியில் சேர்த்துள்ளார். பிறகு ராகேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருப்பு வளாகத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்து மனைவிக்கு ரவி போன் செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாக அவர் போன் எடுக்காததால், சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி கலைவாணி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலமாக ரத்த வெள்ளத்தில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டு வேலைக்கு சேர்ந்து இருந்த ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை காணவில்லை. கலைவாணியின் கழுத்தில் கிடந்த நகையும் மாயமாகி இருந்தது. பின்னர் இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவலாளி வேலைக்கு சேர்ந்த ராகேஷ், கலா வீட்டில் உள்ள நகைக்கு ஆசைப்பட்டு, கலைவாணியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு குடும்பத்துடன் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சரக்கு ஆட்டோவில் முதல்வரின் பிரச்சாரத்திற்கு சென்றவர்களின் வாகனம் விபத்து : 40 பேர் படுகாயம் !