Tamilnadu

மக்களே உஷார்.. OLX பயனாளர்களை குறிவைத்து பணம் பறிப்பு - வசூல் வேட்டையில் ஈடுபட்ட மோசடி கும்பல் கைது!

சென்னையை சேர்ந்த சரவணன் பழனிசாமி என்பவர் olx தளத்தில் டைனிங் டேபிள் 3,000 ரூபாய்க்கு விற்பனைக்கு இருப்பதை பார்த்து, அந்த நபருக்கு போன் செய்து விசாரித்துள்ளார். பின்னர் 3,000 ரூபாயை போன் பே மூலமாக தனது செல்போன் எண்ணுக்கு அனுப்ப கூறியுள்ளார்.

olx தளத்தில் பதிவு செய்த செல்போன் எண்ணின் மூலம் பேசியவர். இதனை நம்பிய சரவணன் 3,000 ரூபாயை குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பிய பிறகு அந்த செல்போன் எண் உடனடியாக ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. தான் ஏமாந்ததை உணர்ந்த சரவணன் மத்திய குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குபதிவு செய்து மோசடி நபரின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கை வைத்து தீவிரமாக தேடி உள்ளனர். தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் ஒன்றில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து அடிக்கடி பணம் எடுப்பதை போலிஸார் கண்டுபிடித்து உடனடியாக அங்கு விரைந்து மோசடி நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பது தெரியவந்தது. இவர் olx இல் தனது பெயர் மற்றும் விலாசத்தை மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை தருவதாக கூறி பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்ததும் தெரியவந்தது.

இவரிடமிருந்து லேப்டாப், சிம்கார்டுகள், வங்கி புத்தகம், மெமரிகார்டுகள் போன்றவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சரவணகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: இராணுவ அதிகாரி எனக் கூறி OLX மூலம் பல கோடி மோசடி : தீரன் பாணியில் மோசடி கும்பலை கைது செய்த போலிஸ்! #Crime