Tamilnadu

இரவு நேரத்தில் வீட்டின் கதவில் தொங்கவிடப்பட்ட அதிமுகவின் பரிசு பொருட்கள் : வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.கவை தேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்து அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளில் பரிசு பொருட்கள் அடங்கிய பையைத் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த பரிசு பொருட்கள் அடங்கிய பையில், ஒரு தட்டு, புடவை, வேஷ்டி ஆகியவை இருந்துள்ளது. பொதுமக்கள் தூங்கும்போது இரவு நேரத்தில், வீடுகளின் முன்பு பரிசு பொருட்களைத் தொங்க விட்டு செல்வது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சுரேஷ் கூறுகையில், “விளாங்குறிச்சி, விநாயக புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவுநேரத்தில் வீடுகளின் கதவுகளில் பரிசு பொருட்களை அ.தி.மு.கவினர் தொங்க விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக போலிஸாருக்கு தகவல் அளித்தால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு கூறுகின்றனர். போலிஸார் அ.தி.மு.கவினருக்கு சாதகமாகச் செயல்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: நீலகிரியில் கால்நடை துறை பேரில் வாக்குக்காக கோழி, ஆடுகளை வழங்கும் அதிமுக: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்