Tamilnadu

கடலூர் அருகே விபத்தில் பள்ளி மாணவர்கள் பலி... பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தபிறகு ஏற்பட்ட சோகம்!

கடலூர் மாவட்டம், செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா. இவர் இறையூரில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில், ஜெயசூர்யாவின் பிறந்தநாளையொட்டி, நண்பர்கள் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்தனர். இதையடுத்து செங்கமேட்டில் ஜெயசூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடினர். பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து, பெண்ணாடத்தில் நண்பனை விடுவதற்காக ஜெயசூர்யா, பிரவீன்குமார் மற்றும் அரவது நண்பர் என மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

இதையடுத்து, நண்பனை வீட்டில் விட்டுவிட்டு, ஜெயசூர்யாவும், பிரவீன்குமாரும் அதே வாகனத்தில் செங்கமேடு திருப்பிக் கொண்டிருந்தனர். கூடலூர் அருகே சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசூர்யா உயிரிழந்தார்.

பிறகு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரவீன்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே இருக்கும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் இருவரும் ஒரே விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "NEET, JEE, UPSC தேர்வுகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா?": தேர்வு முறையில் மாற்றம் கோரும் நவீன் பட்நாயக்!