Tamilnadu

அதிகாரிகளின் அலட்சியம்; பிப்ரவரி 30 இறப்பு சான்றிதழ்... வட்டாட்சியர் அலுவலகத்தின் கூத்து!

விருதுநகர் மாவட்டம், பேயம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர்சாமி. இவர் 2000ம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது இவரின் இறப்பு சான்றிதழை குடும்பத்தினர் வாங்கவில்லை. தற்போது இவரின் மகன்களுக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது.

இதனால், அழகர்சாமியின் மகன் குமாரசாமி, கீழராஜகுலராமன் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று இறப்பு சான்றிதழ் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மேலராஜகுலராமன் ஊராட்சி அலுவலக பதிவேட்டில் இருந்து இறப்பு சான்றிதழ் எடுத்தகாக கூறி கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அழகர்சாமியின் மற்றொரு மகன் உதயகுமார், வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். பின்னர் வங்கி அதிகாரியிடம் வாரிசு சான்றிதழ் கொடுத்துள்ளார். இதனைச் சரிபார்த்த அதிகாரிகளுக்குக் குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

மீண்டும் ஒரு முறை சான்றிதழை நன்றாகப் பார்த்தபோது, உலகிலேயே இல்லாத ஒரு தேதியில் சான்றிதழ் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அதவாது, பிப்ரவரி 30ம் தேதியில் அழகர்சாமி இறந்து போனதாக சான்றிதழில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால், உதயகுமாருக்குக் கிடைக்க வேண்டிய வங்கிக் கடனும் ரத்தானது.

இது தொடர்பாக உதயகுமார் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வட்டாட்சியர் ஸ்ரீதர் உரிய விசாரணை நடத்தி சான்றிதழில் திருத்தம் செய்யப்படும் என அவரிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுவதால் சான்றிதழ்களில் இதுபோன்று பெயர்களும், தேதிகளும் அடிக்கடி நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.