Tamilnadu

மாவட்ட ஆட்சியருக்கு மரண வாக்குமூல கடிதத்தில் கோரிக்கை வைத்த விவசாயி : கோவை அருகே சோகம்!

வாழை விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று கோவையில் தனியார் வங்கியின் கடன் தொல்லையால் மற்றொரு விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலையன்ஸ் ஹோம்லோன் என்ற தனியார் நிறுவனத்தில் வங்கிக் கடன் பெற்றுள்ளார். பின்னர் கொரோனா ஊரடங்கால் இவரது வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆனந்தால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனியார் வாங்கியிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கடனை திருப்பி தர வேண்டும் என ஆனந்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலடைந்த ஆனந்த் மரண வாக்குமூலம் எழுதிவைத்துவிட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், “எனது தற்கொலைக்கு ரிலையன்ஸ் ஹோம்லோன் நிறுவனம்தான் காரணம்.மேலும் வங்கியிடம் இருக்கும் தனது வீட்டுப் பத்திரத்தை மீட்டு, எனது குடும்பத்தினரிடம் கொடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றித் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் விரைந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தனியார் வங்கிகளின் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் வங்கிகளின் அடாவடித்தனத்தை அ.தி.மு.க அரசு கண்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. விவசாயிகள் நஷ்டத்திலும், கடன் தொல்லையில் தவித்தபோது, எந்த உதவியும் செய்யாமல், தற்போது தேர்தல் வருவதையொட்டி விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து, விவசாயிகளை ஏமாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: விவசாயியின் வீட்டை பூட்டி சீல் வைத்த தனியார் வங்கி: ஒரு வாரமாக வீட்டிற்கு வெளியே காத்து கிடக்கும் அவலம்!