Tamilnadu

மோடி - எடப்பாடி ஆட்சியில் கைவிடப்பட்ட விவசாயிகள் : கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்த விவசாயி !

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பெத்தேல்புரம் கூட்டுவிளைவு பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் நெய்யூர், புத்தேரி ஆகிய பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழை விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி மீண்டும் வாழை பயிரிட்டுள்ளார். இதுவும் சின்னதம்பிக்கு லாபத்தைக் கொடுக்காமல் நஷ்டத்தையே ஏற்படுத்தியது. இதனால் கடனிலிருந்து மீளமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அருகில் உள்ள கால்வாயில் குளித்து விட்டு வருவதாக வீட்டாரிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். மாலைநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், சின்னத்தம்பி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை,

இதையடுத்து, நேற்று காலையில் சின்னத்தம்பி அப்பகுதியில் உள்ள, பெற்றோரின் கல்லறை அருகில் இறந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குளச்சல் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சின்னத்தம்பியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், வாழை விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் சின்னத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: கரையான்களுக்கு இரையான சொந்த வீடு கனவு.. ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த பன்றி வியாபாரி.. ஆந்திராவில் சோகம்!