File Image
Tamilnadu

“சீரழிந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : மோடி அரசுக்கு டி.ஆர்.பாலு கேள்வி!

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி. ஆர். பாலு அவர்கள், 12 பிப்ரவரி 2021, மக்களவையில், கொரோனா கொள்ளை நோய்த் தொற்றின் பொருளாதார தாக்கத்தால், இந்திய சுற்றுச் சூழல் திட்டங்கள் பாதிக்கப்படுமா? என்று மத்திய சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவ மாற்றத் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோவிம், விரிவான கேள்வியை எழுப்பினார்.

கொரோனா கொள்ளை நோய்த் தொற்றின் தாக்கத்தால், சுற்றுச் சூழல் சீரழிந்து வருவதை தடுக்க மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன? என்றும், சுற்றுச் சூழலை பாதுகாக்க, பொது மக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் ஏதேனும் அரசிடம் உள்ளதா? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவ மாற்றத் துறை இணையமைச்சர், அளித்த பதில் பின்வருமாறு : “கொள்ளை நோய்த் தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சுற்றுச் சூழல் திட்டங்களுக்கான அனுமதியை சுலபமாக அளிக்கவும், பொது மக்கள் கருத்து கேட்பை தொடரவும் தேவையான அறிவிக்கைகள், சுற்றுச் சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன என்றும்;

மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த, இணைய வழிக் கருத்தரங்குகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பயனாளிகளின் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தேவையான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும்;

தேசிய பசுமைப் படையினர், சுற்றுச் சூழல் மன்றம், தேசிய இயற்கை சுற்றுலா திட்டங்கள் போன்ற திட்டங்களின் மூலம், மாணவர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், 1,60,000 பள்ளிகளில், 40 லட்சம் மாணவர்கள் வாயிலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றும்;

தேசிய அளவில் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள, தேசிய பசுமை இந்தியா இயக்கத் திட்டத்தின் மூலம், காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மரம் நடும் விழாக்களை நடத்தி சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும், மத்திய மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, சுற்றுச் சூழலை பாதுகாக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Also Read: “பிறந்தநாளுக்கு வர மறுத்த நண்பனை காரை ஏற்றி கொன்ற உயிர் நண்பன்” : ஆந்திராவில் நடந்த கொடூர சம்பவம்!