Tamilnadu
"தொழில் தீர்ப்பாயத்தில் தமிழ் தெரிந்த நீதிபதிகளை நியமித்திடுக" : சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்!
சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு, தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பணி செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பிரத்யேகமாக முன்னெடுக்கவும், தீர்க்கவும் லேபர் நீதிமன்றங்கள் அல்லது மத்திய அரசின் தொழில் தீர்ப்பாயங்கள்(Central Government Industrial Tribunal) அமைக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி சென்னையில் சாஸ்திரி பவனில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையை விட்டு நீக்குவது, பழிவாங்கும் விதமாக தொழிலாளர்களை தண்டிப்பது, தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய சலுகைகளை மறுப்பது, கூட்டு பேர உரிமையை மறுப்பது என தொழிற் தகராறு சட்டத்தின் படி எழும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விசாரித்து தீர்ப்புகள் வழங்குவதற்கு மொத்த தமிழ்நாட்டிற்கும் அது ஒரு இடம் தான்.
அணிதிரட்டப்பட்ட, அணி திரட்டப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்களின் தாவாக்களை (Disputes) தீர்ப்பதற்கு மத்திய அரசு வழங்கி இரு க்கும் இடம் அது ஒன்று மட்டும் தான். எந்தவொரு தொழில் தாவாவும் (Industrial Dispute) மூன்று மாதத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் 2003 ஆம் ஆண்டில் இருந்து தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தாவாக்களையும் கொண்டதாக சென்னை தீர்ப்பாயம் இருக்கிறது.
இந்த ஆக்கத்தில், வருங்கால வைப்பு நிதி (Provident Fund) குறித்த தாவாக்களையும் இந்த தீர்ப்பாயத்தோடு இணைத்து 2017 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது மத்திய அரசு. கொடுமை என்னவென்றால், 2017 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிபதி நியமிக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் ஒடிசாவைச் சேர்ந்த தீப்தி மல்ஹோத்ரா அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்படார். ஆனாலும் தாவாக்கள் முறையாகவும், முழுமையாகவும் நடத்தப்படவே இல்லை. வழக்குகள் எல்லாம் மேலும் தேங்கின. கொரோனா வந்த பிறகு எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகிக் கொண்டு இருக்கின்றன.
இந்த தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்களை வைத்துத்தான் வழக்கு நடத்த வேண்டுமென்றில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களே தங்களுக்காக வழக்கு நடத்தலாம். அல்லது தொழிற்சங்கத் தலைவர்களே வழக்கு நடத்த லாம். அப்படியானால் தீர்ப்பாயத்தில் புழங்கும் மொழி அந்தந்த மாநிலத்தின் மொழியாக இருக்கவேண்டியது அவசியம். வேறு மாநிலத்து நீதிபதிகளை நியமித்தால் எப்படி எளிய, சாதாரண தொழிலாளர்கள் தங்களுக்காக வாதிட முடியும். அதனால் முன்னெடுக்க முடியாத, சரியான தீர்ப்பு கிடைக்காத தீர்ப்புகளும் இருக்கின்றன. உடனடியாக தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை, சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு நியமிக்க வேண்டியதும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முறைப்படுத்தி தீர்க்க வேண்டியதும் அவசியம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!