Tamilnadu

"20 திருக்குறள் சொல்லுங்க; இலவசமா பெட்ரோல் வாங்கிட்டு போங்க" : கரூர் பெட்ரோல் பங்கின் அசத்தல் அறிவிப்பு!

கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், 20 திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மாணவர்களிடமும், பெற்றோரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கரூர் மாவட்டம், வள்ளுவர் நகர் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. மாணவர்கள் மத்தியில் திருக்குறள் பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 10 குறளை ஒப்பித்தால் சொன்னால் அரை லிட்டரும், 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படும் என பெட்ரோல் பங்க் நிர்வாகம் அறிவித்தது. மேலும் இந்தப் போட்டியில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, பெற்றோருடன் மாணவர்கள் பெட்ரோல் பங்கிற்குச் சென்று திருக்குறளைச் சொல்லி பெட்ரோலை இலவசமாக வாங்கி செல்கின்றனர். மேலும், இந்தப் போட்டிஎங்களுக்கு ஒரு ஊக்கமாகவும், படித்ததை மறக்காமல் இருக்க உதவியாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த திருக்குறள் திட்டம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம், "மாணவர்களிடம் தமிழ் வாசிப்பதும், பேசுவதும் குறைந்து வருகிறது. மேலும் மக்களிடையே திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பெட்ரோல் திட்டம் அறிவிக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.

Also Read: “தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி”: பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது குற்றப்பிரிவு வழக்குப் பதிவு!