Tamilnadu

மருத்துவக் கல்லூரி பதவி உயர்வு கலந்தாய்வில் முறைகேடு? - மருத்துவ கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மருத்துவ கல்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்களுக்கான பணிமாற்ற மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக் கோரி, தேனி மருத்துவ கல்லூரி இணை பேராசிரியர் தங்கராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காது, மூக்கு, தொண்டை பிரிவில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கன்னியாகுமரி உள்பட 9 மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஐந்து கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தபோதும், அதில் 9 கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது தன்னிச்சையானது அல்ல எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனுவுக்கு ஜனவரி 25ம் தேதி விளக்கமளிக்கும்படி, மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.