Tamilnadu

“தேர்தல் நேரத்திலும் கொள்ளையில் தீவிரம் காட்டும் தெர்மாகோல் விஞ்ஞானி” - உதயநிதி ஸ்டாலின் விளாசல்!

கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட இந்தப் பணிகளில் சேர்வதற்கு ரூ. 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை துறை அமைச்சர் மட்டத்தில் வசூல் நடப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அ.தி.மு.க ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளாக வேலைவாய்ப்பின்மை பெருகி, பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வாழ்வாதாரமின்றித் தவித்து வருகின்றனர். அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் இளைஞர்கள் அ.தி.மு.க அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலிலும், கூட்டுறவுத் துறை பணியிடங்களை நிரப்புவதற்கு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவின் பேரில் பயங்கர வசூல் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “பத்தாண்டுகள் அடித்த கொள்ளை போதாது என தேர்தல் நேர வசூலை தொடங்கிவிட்டார் தெர்மாகோல் விஞ்ஞானி. கூட்டுறவுத்துறை பணிகளை நிரப்ப ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை கலெக்‌ஷன் நடக்கிறது. இந்த தொகையை யார் வசூலித்து கொடுப்பதென உள்ளூர் அ.தி.மு.கவினரிடையே நடக்கும் போட்டிகளுக்கும் பஞ்சமில்லை.

கொண்டுவந்த திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்க வக்கற்று, வேலைக்காக ஏங்கி நிற்கும் இளைஞர்களை சுரண்டி அதில் வரும் பணத்தில் வாக்குகளை வாங்க நினைப்பது குரூரத்தின் உச்சம். கொள்ளையடிப்பதை தவிர்த்து ஆட்சியின் இறுதி காலத்திலாவது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட்டுச் செல்லுங்கள் அடிமைகளே” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Also Read: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து கேள்வியெழுப்பிய OPS இன்றுவரை உண்மையை வெளியிடாதது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி!