Tamilnadu

“கண்டுகொள்ளாத மோடி அரசு - பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு” : சிரமத்தில் வாகன ஓட்டிகள்!

உலகம் முழுவதுமே கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், தற்போது மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் விலைவாசி உயர்வினை மோடி அரசு கட்டுப்படுத்தாதன் விளைவு, மக்கள் மோசமான நிதி நிலைமையை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், பெட்ரோல் டீசல் விலையை வேறு நாள்தோறும் அதிகரிக்கின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன.

இந்த நிலையில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 87.63 ரூபாயாக உள்ளது. அதேபோல் டீசல் விலை 80.43 ரூபாயாக உள்ளது.

நேற்றைய விலையை பொறுத்தவரை பெட்ரோல் 87.40ரூபாயாக இருந்ததில் இருந்து 23காசுகள் அதிகரித்துள்ளது. அதேபோல், டீசல் விலையும் 80.19ரூபாயில் இருந்து 24காசுகள் அதிகரித்து 80.43 ரூபாயாக உள்ளது. நாள்தோறும் சில்லரை அளவில் உயர்த்துவதால், இரட்டிப்பு அளவிற்கு பெட்ரோலுக்கு மட்டுமே தங்களது பணம் செலவாகிறது எனவும். கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வை மத்திய அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்றும் மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Also Read: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ56 வரி - கந்துவட்டியை விட மோசமாக கொள்ளையடிக்கும் அரசுகள்!