Tamilnadu

தீரன் படத்தின் உண்மை சம்பவம் : 16 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருக்கும் MLA கொலைவழக்கு.. நீதிபதி அதிர்ச்சி!

கடந்த 2005 ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அ.தி.மு.க எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம் வட நாட்டு கொள்ளையர்களால் நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டிலிருந்து ஏராளமான நகை, பணத்தையும் கொள்ளைக் கும்பல் திருடிச் சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொலையாளிகளை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தார். வழக்கை விசாரித்த போலிஸார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பவாரியா மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஸ்வரா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஓம்பிரகாஷ் பவாரியா சிறைச்சாலையில் இறந்துவிட்டார். அவரது சகோதரர் ஜெகதீஷ்வரா 2005ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை விசாரணைக் கைதியாக புழல் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெகதீஷ்வரா தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 16 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் இருந்ததை அறிந்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார் .

9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ஏன் இவ்வளவு தாமதம் என்று காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் வருகிற 18-ஆம் தேதி உரிய விவரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் கரு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: வீணாக மழைநீர் கடலில் கலப்பது தீவிரமான விவகாரம்: நிபுணர் குழு அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!