Tamilnadu

பொங்கல் பரிசு டோக்கன் மூலம் சுய விளம்பரம் தேடும் அதிமுக - அவசர விசாரணை கோரி ஐகோர்ட்டில் திமுக மனு தாக்கல்

பொங்கள் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4ஆம் தேதி முதல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக கட்சியின் சின்னம் பெற்றுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்த்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்த பொங்கல் பரிசு தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக அதிமுக கட்சியினர் சுய விளம்பரம் தேடி கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த டோக்கன்கள் ஆளும்கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த பரிசு தொகை போய் சேராது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் முறையிட்டார். இதையடுத்து, மனுவை பட்டியலிடும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் வில்சனுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பின்னர் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Also Read: அமைச்சர்கள் படம் போட்டு டோக்கன் வழங்க மக்கள் வரிப்பணம் என்ன அவர்கள் சொத்தா? - அதிமுகவை சாடிய துரைமுருகன்!