Tamilnadu

பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த எழுவருக்கு கொரோனா? தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட 2,800 பேர்!

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஓராண்டு முழுவதும் உலக மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் இடி விழுந்தது போன்று மீண்டும் மக்களை அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது பிரிட்டன் நாட்டில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று.

இதனால் உலக நாடுகள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஏனெனில், இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றால் 70 சதவிகிதம் வேகமாக பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வகையில், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான சேவைகளுக்கு வருகிறது டிசம்பர் 31ம் தேதி வரையில் தடை விதித்துள்ள மத்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 25ம் தேதி பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த அனைத்து பயணிகளையும் கண்காணிக்குமாறு அரசு உத்தரவிட்டதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்தவர்கள் பற்றிய விவரங்கள் விசாரிக்கப்பட்டது. அதில், 7 பேர் பிரிட்டனில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.

குன்றத்தூர் தாலுகாவைச் சேர்ந்த 4 பேரும், காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த 3 பேரும் ஆவர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டு, உடல்நிலை குறித்தும் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்த் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களில் இங்கிலாந்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த சுமார் 2,800 பேரை கண்டறிந்து அவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறையினரின் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Also Read: “கொரோனா ஊரடங்கு மற்றும் வேலையிழப்பால் காலியான குடும்பங்களின் சேமிப்பு” : மோடி ஆட்சியில் நிகழும் அவலம்!