Tamilnadu

”உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்”: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்!

கொரோனா அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தன் வீட்டை தகரம் வைத்து அடைத்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கொரொனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்தப் பகுதியில் தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி, பதிலளிக்க, தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொரோனாவை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, தமிழக அரசு, மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் அறிக்கையை ஏற்று, அரசுக்கும் முன்கள பணியாளர்களுக்கும், இந்த பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்து வந்த மனுதாரருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், தற்போது உருமாற்றம் பெற்று பரவும் கொரோனா காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மகாராஷ்டிராவில் இரவு நேரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், மோசமான விளைவுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுத்தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மிகத் தீவிரமான கண்காணிப்பு மற்றும் திறமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Also Read: “காவல், தீயணைப்புத்துறையினருக்கு இடர்படி வழங்கும்போது துப்புரவு பணியாளர்களுக்கு வழங்காதது ஏன்?” - ஐகோர்ட்