Tamilnadu

“இந்தியில் கடிதம்?: மொழிப் பிரச்னைகள் மீண்டும் தொடரக்கூடாது” - மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்!

தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் கடிதம் அனுப்புவதற்கு எதிரான வழக்கில் மொழிப்பிரச்சினை தொடரக்கூடாது என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது. ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்பவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தர வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், மனுதாரருக்கு தவறுதலாக ஆங்கில கடித இணைப்பு அனுப்பப்படவில்லை. பின்னர் ஆங்கில கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ஆங்கில கடிதம் இதுவரை வரவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனுப்பிய கடிதமும் இந்தியில் தான் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று அடிக்கல் நாட்டிய நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஆங்கில கடிதம் வந்தடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்தியா பல மொழிகளைக் கொண்டது. இதுபோல் மொழிப்பிரச்சினைகள் மீண்டும் தொடரக்கூடாது. மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: ஊழல் முகட்டில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அப்பாவி வேடத்தை கலைத்த ஐகோர்ட் - K.N.நேரு கடும் விமர்சனம்!