Tamilnadu

புதுக்கோட்டையில் OP சீட்டில் இரட்டை இலை சின்னம்: அரசு செலவில் அதிமுகவுக்கு பிரசாரம் செய்யும் விஜயபாஸ்கர்

சுகாதாரத் துறையில் ஊழல் செய்வது மட்டுமல்லாமல், அரசு பணத்தில் பிரச்சாரம் செய்து அரசு மருத்துவமனைகளில் அராஜகம் மற்றும் அத்துமீறல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை அமைச்சர் விஜயபாஸ்கர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே செல்லபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் பார்க்க வரும், புற நோயாளிகளுக்கு வழங்கப்படும் புற நோயாளிச் சீட்டின் (0P sheet) பின்புறம் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டவாறு வழங்கப்படுகிறது.

அரசின் நலத்திட்ட உதவிகளில் அதிமுக விளம்பரமும் இரட்டை இலை சின்னம் பொறித்த விளம்பரமும் இருப்பது அமைச்சர் விஜயபாஸ்கரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. புற நோயாளிகளுக்கான மருத்துவ சீட்டிலும் கூட அதிமுகவின் விளம்பரம் மற்றும் பிரச்சாரம் அரசு செலவில் நடந்து கொண்டிருக்கிறது.

சுகாதாரத் துறையில் ஊழல் செய்வது மட்டுமல்லாமல் , அரசு பணத்தில் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்து, அரசு மருத்துவமனைகளில் அராஜகம் மற்றும் அத்துமீறல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.

விஜயபாஸ்கரின் இந்த செயலுக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அராஜக செயல் தொடருமேயானால், பொதுமக்களைத் திரட்டி, மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: எடப்பாடியின் விளம்பர வெறியால் தொடரும் உயிர்பலி: கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் தாக்கி பலி!