Tamilnadu

புலி மர்ம மரணம்: விசாரணை எனக் கூறி கிராம மக்களை அடித்து உதைத்த வனத்துறையினர்.. நீலகிரியில் கொடூரம்!

முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் கடந்த வாரம் இரு குட்டிகளை ஈன்ற புலி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் அச்சக்கரை கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த வாரம் இரு குட்டிகளை ஈன்ற புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது.

இதைதொடர்ந்து இரு குட்டிகளை மீட்ட வனத்துறையினர், அதை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இறந்த புலி விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த புலி

இதனிடையே விசாரணை என்ற பெயரில் அப்பாவி விவசாயிகள் மற்றும் கிராம மக்களை வனத்துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக அடித்து உதைத்திருக்கிறாகள். வலி தாங்க முடியாமல் சாமியப்பன் என்ற விவசாயி நேற்று தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த அவர் “கிராம மக்களையும் தன்னையும் விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி ஆனைகட்டி வன ஓய்வு விடுதியில் தங்களை இருட்டு அறையில் வைத்து அடித்து உதைத்து உயிர் நாடியில் மிளகாய்த்தூள் வைத்து தன்னை துன்புறுத்தியதால் வலி தாங்க முடியாமல் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.”

புலியின் இறப்பு குறித்து இன்னும் பிரேத பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் கிராம மக்களை வனத்துறையினர் அழைத்துச் சென்று அடித்து உதைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “கஞ்சாவை ஒரே இடத்தில் ஸ்டாக் வைக்கவேண்டாம்”: சமூகவிரோதிகளுக்கு அறிவுறுத்தும் போலிஸ்-தேனி அருகே அதிர்ச்சி!