கோப்புப்படம்
Tamilnadu

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் எனக் கூறி தப்பிக்கிறது எடப்பாடி அரசு - டி.ஆர்.பாலு எம்.பி கடும் குற்றச்சாட்டு!

தாம்பரம் அடுத்த பி.டி.சி குடியிருப்பு, வரதராஜபுரம், பரத்வாஜ் நகர், ராயப்பா நகர், உள்ளிட்ட மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட தி.மு.க பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு அங்குள்ள பொதுமக்களுக்கு உணவு பொட்டலம், ரொட்டி, போர்வை என அத்தியாவசிய பொருட்களை வழங்கினார், மேலும் அங்குள்ளவர்களிடம் நிலைமையை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசும்போது:-

“2015 ம் ஆண்டு அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பை கணக்கிட்டு அப்போது வெள்ளத்திற்கு ஏற்றார்போல் அதிமுக அரசு வடிவமைக்கவில்லை. 40 ச.கி.மீ பகுதியில் முறைப்படி தரை மட்டம் கணக்கீடு செய்யவில்லை. கார்டூன் 3D படம் அமைக்கவில்லை, திட்டம் தீட்டவில்லை அதனால் தான் இந்த விளைவுகள் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது.

இது குறித்து 6 மாதங்கள் முன்பாக மாவட்ட ஆட்சியாளரிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. சொல்லும் இடத்தில்தான் நாங்கள் உள்ளோம். அதனால் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தாழ்வான பகுதி என அரசு தரப்பில் கூறி தப்பிக்கமுடியாது. ஏழை எளியோர்களிடம் வேண்டுமானால் பேசி செல்லலாம். பொறியியல் ரீதியாக பேச வேண்டும். நான் பொறியியல் படித்தவன் என்னிடம் பேசட்டும்.

2015ல் வெள்ள பாதிப்பில் பட்டும் இந்த ஆட்சியாளர்களுக்கு புத்தி வரவில்லை. 2021ல் புத்தியுள்ள ஆட்சி அமையும். அப்போது முறையாக செயல்படுத்துவோம்.

டி.ஆர் பாலுவுடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை ஆ. மனோகரன், வரதராஜபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வமணி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Also Read: "பேட்டியளிப்பது மட்டுமே ‘நிவர்’ சாதனை என கருதி முதல்வரும், அமைச்சர்களும் செயல்படக்கூடாது" : மு.க.ஸ்டாலின்