Tamilnadu

“ஜெனரேட்டரில் இருந்து வாயு கசிந்து இருவர் பலி” : செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்தடையால் ஏற்பட்ட சோகம்!

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகே லத்தூர் பகுதியில் தனியார் தோட்டத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொத்தனார்விளை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (26) மற்றுமொரு ராஜேஷ் ஆகிய இருவரும் இந்த தோட்டத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாத காரணத்தால் செல்போனுக்கு சார்ஜ் போட அங்குள்ள சிறிய செட்டில் ஜன்னல்கள் கதவுகளை அடைத்துவிட்டு ஜெனரேட்டரை இயக்கி செல்போன் சார்ஜ் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராவிதமாக ஏற்பட்ட விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஜெனரேட்டரில் இருந்து வாயு கசிந்து உயிரிழந்தார்களா அல்லது ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்களா என அணைக்கட்டு போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த சிறிய ரூமில் கதவுகள் ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் ஜெனரேட்டர் இயக்கியதால், அங்கு பிளாஸ்டிக் கூடையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நாய்க்குட்டிகளும் உயிரிழந்துள்ளன.

ஜெனரேட்டரிலிருந்து வாயு அல்லது மின்சாரம் கசிந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவலாளி ஆறுமுகம் இன்று காலை நாய்களுக்கு பால் கொண்டு வந்து கதவை திறந்து பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் கட்டிலில் கிடந்துள்ளனர். கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: அ.தி.மு.க அரசின் அலட்சியம்.. 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் : செங்கல்பட்டு விவசாயிகள் வேதனை!