Tamilnadu

கறந்த பாலை கூட்டுறவு சங்கம் வாங்க மறுத்தால் கிணற்றில் ஊற்றிய விவசாயி : பால்வளத்துறை அமைச்சர் ஊரில் அவலம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கறந்த பாலை கூட்டுறவு சங்கத்தினர் வாங்க மறுத்ததால், பாலை கிணற்றில் ஊற்றி கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பெருமள்தேவன்பட்டி கிராமம். இக்கிராமத்தின் பிரதான தொழிலே பால் உற்பத்தியாகும். இங்கு உற்பத்தியாகும் பாலின் அளவு என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முழுவதும் வினியோகிக்கப்படும் பாலின் அளவிற்கு பிரதானமாக இருக்கும்.

இந்நிலையில் இன்று மாலைக்கு மேல் கறக்கப்பட்ட பாலை கூட்டுறவு சங்கத்தினர் வாங்க மறுத்தனர்.கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தினந்தோறும் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கிவந்த பால் உற்பத்தியாளர்கள் இன்று கூட்டுறவு சங்கத்தின் முடிவை கடுமையாக எதிர்த்தனர்.

குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் தொகுதி இருக்கும் இடமான சிவகாசி என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் தான் உள்ளது. மாநில பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ள இந்த மாவட்டத்திலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் நிலைமை கவலைக்குரியது என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக மாநில அமைச்சர், துறை தொடர்பான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தங்களது நிலைமை மாறும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Also Read: “பித்தம் தலைக்கேறிய நிலையில் பேசிவருகிறார் ராஜேந்திர பாலாஜி” - ஆளுநர் செயலாளரிடம் தி.மு.க புகார் மனு!