Tamilnadu

“கஞ்சா புழக்கத்தால் தமிழகத்தில் தொடரும் கொலைகள்”: கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்த முதியவர் படுகொலை!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூர் கோமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். தோட்ட காவலாளியான இவர் மனைவி மரகதம் மற்றும் 2 பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை என குடும்பமாக வசித்து வருகின்றனர்.

தினமும் காலை 6 மணியளவில் சாமுவேல் காவலாளியாக பணியாற்றும் மயான பகுதிக்கு அருகே, காலை கடனை முடிப்பதற்காகச் செல்வது வழக்கம். அதே போன்று இன்றும் சென்றுள்ளார்.

சாமுவேலின் உறவினரான மரகதம் கோவிந்தசாமி என்பவரின் மகனான விமலராஜ் மற்றும் அவரது நண்பர் சகாயராஜ் இருவரும் கத்தியுடன் மறைந்திருந்து மயான பகுதிக்கு வந்த சாமுவேலை தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலிஸார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மரகதம் கோவிந்தசாமி குடும்பத்திற்கும் சாமுவேல் குடும்பத்திற்கும் சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு குடும்பத்திற்கும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் விலகிய நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் தோட்ட காவலாளியாக இருக்கும் சாமுவேல் அவரது உறவினரான மரகதம் கோவிந்தசாமி அவர்களின் மகன் விமலராஜ் மற்றும் அவரது நண்பர் சகாயராஜ் இருவரும் சில தினங்களுக்கு முன்பு மயான பகுதியில் காவல் காக்கும் இடத்தில் மறைமுகமாக கஞ்சா புகைத்துக் கொண்டிருந்துள்ளனர்.

அதைப் பார்த்த சாமுவேல் இருவரையும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளார். கஞ்சா போதையில் இருந்வர்கள் அவரிடம் தகாத முறையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தையூர், கோமான் நகர் உள்ளிட்ட இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார் சாமுவேல். காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், சாமுவேல் கொடுத்த தகவலின் அடிப்படையில் தங்களது வீட்டிற்கும் தாம் கஞ்சா பயன்படுத்தும் விஷயம் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் விமல் ராஜ் மற்றும் அவரது நண்பன் சகாயராஜ் இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் மயான பகுதிக்கு வரும் சாமுவேலை சரமாரியாக வெட்டிச் சாய்த்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், தையூர், கோமான் நகர், படூர் உள்ளிட்ட இடங்களில் உள்ளிட்ட இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பெரிய பிள்ளேரி துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 21). கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கஞ்சா மோதலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை - குன்றத்தூர் அருகே கஞ்சா விற்பனை பற்றி செய்தி வெளியிட்டதற்காக மோசஸ் என்ற செய்தியாளர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததான் விளைவாக தமிழகத்தில் கஞ்சா போதையில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க அரசு முன்வருமா?

Also Read: “செய்தியாளர் வெட்டிக்கொல்லப்பட்டது ஜனநாயகத்தின் மீது விழுந்திருக்கும் சம்மட்டி அடி”-மு.க.ஸ்டாலின் கண்டனம்