Tamilnadu

“போலிஸ் கஸ்டடி மரணம் மனிதநேயமற்ற செயல்.. இது ஜனநாயகத்துக்கு எதிரானது” - ஐகோர்ட் மதுரைக் கிளை கண்டனம்!

அனைத்து காவல் நிலையங்களிலும் முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அது முறையாக செயல்படுகிறதா என்பதையும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதில் விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் கொடுக்க சி.பி.ஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக காவல் ஆய்வாளர் உள்ளார்.

குற்றவாளிகளை தாக்கியதில் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் காவல் ஆய்வாளராக இருப்பதால் இவருக்கு ஜாமீன் கொடுத்தால் வழக்கின் விசாரணை பாதிக்கக்கூடும். எனவே கடும் ஆட்சேபனையை தெரிவிப்பதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யது உத்தரவிட்டார் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன்.

மேலும், தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பிக்கு சில வழிகாட்டுதல்களையும் பின்பற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் தமிழகத்தில்தான் விசாரணை இழப்பு அதிகமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

காவல் நிலைய மரணம் என்பது மனித தன்மையற்ற செயல். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. புகார் அளிக்க காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

காவல் நிலையம் வரும் புகார் மனுதாரர்களை மோசமாக நடத்துவது, காரணம் இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது. புகார் அளிக்க வரும் பொது மக்களின் உரிமைகள் குறித்து ஒவ்வொரு காவல் நிலையத்திலும் முன்பகுதியில் தகவல் பலகை வைக்க வேண்டும். இந்த தகவல் பலகையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்க வேண்டும்.

அனைத்து காவல் நிலையங்களிலும் முக்கியமான பகுதிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அது முறையாக செயல்படுகிறதா என்பதையும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதில் விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதி இந்த உத்தரவு குறித்து தமிழக காவல்துறை தலைவர் ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதனை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Also Read: “ஐகோர்ட்டே எச்சரித்தும் போலிஸ் டார்ச்சரும் கஸ்டடி மரணங்களும் தொடர்வது கண்டனத்திற்குரியது” : மு.க.ஸ்டாலின்