Tamilnadu

பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய L.முருகன்: புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - ஐகோர்ட் கேள்வி

சுதந்திர தினத்தன்று, தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக முகப்பேரை சேர்ந்த குகேஷ் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், உரிய முறையில் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ரவீந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக் ஆஜராகி, பாஜக கட்சி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியது தேசிய கொடி விதிகள் மற்றும் தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றம் என்பதால் எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் குகேஷ் அளித்த புகார் மாம்பலம் காவல் நிலைத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதன் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

Also Read: பா.ஜ.க கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி அவமதித்த எல்.முருகன் - சென்னை காவல் ஆணையரிடம் புகார்!