Tamilnadu

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலிலும் ‘எடை குறைப்பு’? - வெள்ளி பல்லக்கில் பலகை மட்டுமே மிச்சமிருப்பதாக புகார்!

ராமேஸ்வரம் கோயிலை தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வெள்ளி பல்லக்கில் 'எடை குறைந்து' வெறும் பலகை மட்டுமே மிச்சமிருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தங்கம் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த நகைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை, நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஒவ்வொரு கோயிலாகச் சென்று ஆய்வு செய்வது வழக்கம்.

அந்த ஆய்வின்போது, கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நகை, ஏற்கனவே உள்ள நகை விவரங்களை அறிக்கையாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகை சரிபார்ப்பு அலுவலர்கள், ஆய்வுப் பணிக்கு செல்வதில்லை. இதுதொடர்பாக புகார் வந்தால் மட்டுமே ஆய்வு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக திருக்கோயிலின் வைர, வைடூரிய நகைகள் திருடு போனது, வெள்ளிப் பொருள்கள் மாயமானது குறித்தும், முறைகேடுகள் பற்றியும் பக்தர்கள் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் தெரிவித்தனர்.

மேலும், கோயிலில் உள்ள வெள்ளிப் பல்லக்கில் வெள்ளியின் ‘எடை குறைந்து குறைந்து’ தற்போது வெறும் பலகை மட்டுமே தற்போது மிச்சமிருப்பதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள நகைகளை சரிபார்க்கும் பணியில் நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளி பல்லக்கு குறித்து அலுவலர்களிடம் கேட்டபோது, எடையை சரிபார்த்து அறநிலையத்துறையிடம் அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: ராமேஸ்வரம் கோவில் நகைகள் ‘அபேஸ்’ - குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு நோட்டீஸ்!