Tamilnadu

“ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதித்தால்தான் குற்றங்கள் குறையும்” - ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் முறைகேட்டை தடுக்க கோரியும்; போதுமான நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என சூரிய பிரகாசம் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராதாதேவி தாக்கல் செய்த பதில் மனுவில் 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுவது தவறான தகவல் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தவறான தகவல் என குறிப்பிட்ட சிவில் சப்ளை கார்ப்பரேஷன், அடுத்த வரியிலேயே ஊழல் அதிகாரிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு அதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள 105 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறார் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியதோடு, முறைகேடே நடைபெறவில்லையெனில் 105 பேர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினர்.

அதுமட்டுமல்லாமல், நமது நாட்டில் விவசாயம் அநாதையாக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள் லஞ்சம் வாங்கும் ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் இது போன்ற குற்றச் சம்பவங்கள் குறையும் என கருத்து கூறியுள்ளனர்.

மேலும், விசாரணை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? எத்தனை வழக்கு போடப்பட்டுள்ளது? சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை தமிழக அரசு அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ? என கேள்வி எழுப்பி நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு நவம்பர் 9 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Also Read: “ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்யவேண்டும்” : ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு!