Tamilnadu

NEET: CCTV இருக்கும் போது தாலி, மெட்டி போன்ற நகைகளை அகற்றக்கோருவது ஏன்? - மோடி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

நாடு முழுவதும் 2017ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்களுக்கான நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது எனவும், பர்ஸ் வைத்திருக்கக்கூடாது மற்றும் வாட்ச் அணியக் கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, ஆண்டு தோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் ராஜ், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான மாணவிகள் புனிதமாக கருதும் தாலி, மெட்டி மற்றும் காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்வறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என்பதால் இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் எனவும், ஆபரணங்களை அகற்றும்படி, மாணவிகளை நிர்பந்திக்ககூடாது என உத்தரவிடவேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டு துறை, பொது சுகாதார சேவை இயக்குநர், தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.

Also Read: உணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி! #NEET