Tamilnadu

3 சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவு - 40 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதில் நான்கு சுற்றுக் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றிருந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டது.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கியது.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில், 7,510 மாணவர்களே தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்தனர். இதேபோல், இரண்டாவது சுற்று கலந்தாய்விலும் குறைவான மாணவர்களே கலந்து கொண்டனர்.

22,903 மாணவர்களுக்கு, கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 13,415 மாணவர்கள் தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்துள்ளனர்.

இதையடுத்து அக்.16-ம் தேதி தொடங்கிய மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வு தற்போது நிறைவடைந்துள்ளது. மூன்றாவது சுற்றிலும் குறைவான மாணவர்களே கல்லூரிகளை தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மூன்றாவது சுற்று கலந்தாய்வு முடிவில் 40 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தாண்டு சுமார் 90 ஆயிரம் காலி இடங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்வதில் சிக்கல் - மாணவர்கள் அவதி!