கோப்பு படம்
Tamilnadu

“சுடுகாட்டுக்குப் போக வழி இல்லை” : இறந்தவரின் உடலை இடுப்பளவு ஆற்று தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா மட்டிகைக்குறிச்சி கிராமத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கோமுகி ஆற்றை கடந்து சென்று உடலை அடக்கம் செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இறந்த விவசாயி திருமால் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றபோது கோமுகிஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதை பெரிதும் பொருட்படுத்தாமல் அக்கிராம மக்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி இறந்தவரின் உடலை தூக்கிச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இதேபோல் மழைக்காலங்களில் இக்கிராம மக்கள் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஆற்று தண்ணீரில் இறங்கிச் சென்று உடலை அடக்கம் செய்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சுடு காட்டிற்கு செல்ல பாலம் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கோமுகி ஆறு

இதுகுறித்து உறவினர் ஒருவர் கூறுகையில், “இதுப்போல தான் அடிக்கடி நடைபெறுகிறது. மழைக் காலங்களில் எங்கள் கிராமத்தில் யாராவது இறந்தால் அவர்களை இந்த ஆற்றைக் கடந்து அடக்கம் செய்யவேண்டிய நிலைமைதான் உள்ளது. இதுபோல கஷ்டப்பட்டு அடக்கம் செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதுகுறித்து பல முறை புகார் அளித்துவிட்டோம். இதுபோல சிரமங்களைத் தவிர்க்க ஆற்றின் இந்த கரையில் ஒரு சுடுகாடு அமைத்துக்கொடுங்கள்; இல்லையென்றால், ஆற்றைக் கடந்து செல்ல பாலம் அமைத்துக்கொடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: விவசாய நிலத்தில் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம் : மயான பாதையின்றி தவிக்கும் கிராம மக்கள்!