Tamilnadu

GST கூட்டம்: “முதுகெலும்பு இருந்தால் வாக்கெடுப்பு நடத்தக் கோரவும்” - ஜெயக்குமாருக்கு திமுக MLA அட்வைஸ்!

GST கவுன்சில் தொடர்பாக தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னை அன்பகத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதன் விவரம்:

நாளை நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பாக அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொள்கிறார். அவர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவருக்கு முதுகெலும்பு இருந்தால் வாக்கெடுப்பு எடுக்க வலியுறுத்த வேண்டும் . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜிஎஸ்டி திட்டம் தொடங்கிய போது, அதை முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாநில உரிமை பறிக்கும் என்றுக் கூறி எதிர்த்தார்.

மாநில சுய வருமானம் 14% வளரவில்லை என்றால் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி வசூல் செய்த மத்திய அரசு அதை திருப்பித் தராமல் கடன் வாங்கிக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கிறது.

அதிமுகவின் கலெக்சன், கரப்ஷன், கமிஷன் ஆட்சியினால் 5 லட்சம் கோடியாக இருக்கிறது தமிழகத்தின் கடன் சுமை. 5 மடங்கு கடனை உருவாக்கி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது தமிழக அரசு. மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு 16 ஆயிரத்து 580 கோடி ரூபாய் வருவாயை அதிகரிக்க வக்கற்ற அதிமுக அரசு பாஜக அரசு போடும் திட்டங்களுக்கு தலைசாய்த்து வருகிறது.

ஜெயலலிதா அம்மையார் மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது என்று நீட் வரக்கூடாது என்றார் எதிர்த்தார், ஜிஎஸ்டிக்கும் எதிர்த்தார். ஆனால் தங்கள் கட்சித் தலைவியின் கொள்கையை அவமதித்து துரோகம் செய்து பாஜக அரசுக்கு துணை போனதோடு மாநில உரிமைகளை அடகு வைத்து இருக்கிறது அதிமுக அரசு.

தங்கள் தலைவருக்கே துரோகம் செய்யும் அதிமுக அரசு மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள். உலகளகில் மோசமான பொருளாதாரம் என்ற பட்டியலில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. 15 - 20 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளபடுவார்கள் என உலக வங்கி கணக்கெடுப்பு சொல்கிறது.

இந்தியா தன் மாநிலங்களில் உள்ள நோய் தொற்று, உயிரிழப்பு போன்றவற்றை மறைத்து கணக்கெடுப்பை வெளியிடுவதை நிறுத்தி கொண்டது. மாநிலத்திற்கு மாநிலம் எப்படி வேறுபாடுகளுடன் இருக்கிறது.

உணவு, உடை, கல்வி போன்ற அடிப்படை தேவைகளில் வேறுபாடுகள் இருக்கும் போது எப்படி ஒரே நாடு ஒரே திட்டம் சாத்தியமாகும் இது அம்பானி அதானி வாழவைக்க மக்களுக்கு துரோகம் இழைக்கும் திட்டம். அதிகாரத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு திட்டங்கள் தீட்டி வருகிறது.” எனக் கூறியுள்ளார்.

Also Read: "நிர்வாகத் திறனற்ற ஆட்சியால் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்வு” : பழனிவேல் தியாகராஜன் MLA