Tamilnadu
பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய 50 பேர் கொண்ட பாஜக கும்பல்.. சென்னையில் குண்டுக்கட்டாக கைது!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பட்டப்பகலில் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து பாஜக தென்சென்னை மாவட்டத் துணைத் தலைவர் உட்பட 60 க்கும் மேற்பட்டவர்கள் பொருட்களை சூறையாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட் ரஃபீகா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இருவருக்கும் இடையே வாடகை தகராறு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடையை காலி செய்யக்கூறி ரஃபீகா அடிக்கடி கடைக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்தப்படி கடையை காலி செய்ய 2 வருடங்கள் கால அவகாசம் இருப்பதாக ஷாநவாஸ் தரப்பு தெரிவித்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி கடையை காலி செய்ய மறுத்துள்ளனர்.
இவர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் இன்று காலை ஊழியர்கள் வந்து கடையை திறந்த கொஞ்ச நேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கடைக்குள் நுழைந்து சுத்தியல், ஸ்பேனர் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை அடித்து நொறுக்கி, பொருட்களை சூறையாட தொடங்கியுள்ளனர்.
ஊழியர்கள் 6 பேர் மட்டுமே இருந்த நிலையில் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்ட குதூப் எனும் ஊழியரை தள்ளிவிட்டு, வாடிக்கையாளர்களை வெளியே செல்லுமாறு மிரட்டி உள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் நெஞ்சுவலி ஏற்பட்ட ஊழியர் குதூப்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மற்ற ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் சூறையாடிய பொருட்களோடு தப்பி சென்றுவிட, கடைக்குள் இருந்த 11 பேரை மட்டும் காவல்துறையினர் பிடித்து ஆயிரம் விளக்கு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தென்சென்னை மாவட்ட துணை தலைவர் குணசேகரன் உட்பட 11 பேரும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் என்பதும், டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த செயலில் ஈடுபட்டனர், ரஃபீகாவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி.காட்சிகள் சிக்கி விடக்கூடாது என்கிற நோக்கத்தில் கடையை சூறையாடிய கும்பல் சி.சி.டி.வி. டி.வி.ஆரை எடுத்து செல்வதற்கு பதிலாக கம்பியூட்டர் சி.பி.யுவை திருடி சென்றதால், சி.சி.டி.வி. டி.வி.ஆர் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!