Tamilnadu

ஏரியை சுரண்டும் மணல் மாஃபியாக்கள் : ஆளுங்கட்சி ஆசியோடு நடக்கும் மணல் கொள்ளை - கொந்தளிக்கும் கிராம மக்கள்!

தமிழகத்தில் உள்ள ஆறு, குளங்கள் மற்றும் ஏரிகளில் மண் அள்ளுவதற்கு தடைவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணல் திருட்டை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் கூட, உத்தரவை மீறி பல இடங்களில் மணல் திருட்டு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

குறிப்பாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் அனுமதியின்றி, அதிகாரிகள் துணையுடன் நடைபெறும் மணல் திருட்டு அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட, ஊராட்சிக் கண்காணிப்பின் கீழ் 30 ஏரிகள் உள்ளன.

முன்னதாக, குடிமராமத்து பணி எனக் கூறி ஏற்கெனவே இந்த ஏரிகளில் அனுமதியுடன் மண் எடுத்தனர். அப்போது வழங்கப்பட்ட அனுமதியுடன் அதிக அளவில் மண் எடுத்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் தற்போது குடிமராமத்து பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஆளும் கட்சியினர் இரவு பகலாக ஏரியில் மண் எடுத்து வருகின்றனர். அதுவும் எந்த வித அச்சமும் இன்றி, கடந்த சில நாட்களாக பொக்லைன் மூலம் அதிகளவில் மண் எடுத்துவருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை சில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முயன்றால் கூட ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த அதிகாரிகளை மிரட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால், இதுகுறித்து காரிமங்கலம் தாசில்தார் கூறுகையில், மண் எடுப்பதற்கு யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. ஏரியில் மண் அள்ளப்படுவது குறித்து விசாரித்து வருகிறோம் என்கிறார். அரசு அதிகாரிகள் விசாரணை தொடங்குவதற்கு முன்பே ஏரிகள் முழுவதும் காணாமல் போய்விடும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read: “மணல் கடத்தலை தடுக்க எத்தனை உத்தரவு பிறப்பித்தாலும் அதிகாரிகள் மதிப்பதேயில்லை” - ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை