Tamilnadu

Farm Bills: “விவசாயி மகனே ஆதரித்தது வெட்கக்கேடு.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க” - முத்தரசன்

பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “விவசாயத்தை பெருவணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துவிட்டு, விவசாயிகளை அழித்தொழிக்கும் அபாயகரமான வேளாண் விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதியளிப்பு மற்றும் ஒப்பந்தங்கள் பண்ணை சேவைகள் சட்டம் 20/ 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் எளிமைப்படுத்தல்) சட்டம் 2 1/2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 22/2020 ஆகிய மூன்று சட்டங்களையும் அறிமுக நிலையில் இருந்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வேரோடு பிடுங்கி எறியும் விவசாயிகள் விரோதச் சட்டங்களை ‘விவசாயி மகனின்’ அதிமுக ஆட்சி வெட்கமின்றி ஆதரித்து வருகின்றது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு அரசும் பெருவணிக நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம் இயற்றி, கதவு திறந்து வைத்துள்ளது.

விவசாயிகளின் வாழ்க்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதை உணர்ந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தை கூட்டி, வேளாண் விரோதச் சட்டங்களை மத்திய பாஜக அரசு திருப்பப் பெற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: வேளாண் மசோதா: விவசாயிகளின் பழிக்கு ஆளாகாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக - மு.க.ஸ்டாலின் அறிவுரை!