Tamilnadu

சென்னை தெருக்களில் மீண்டும் தகரத் தடுப்புகள்: முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கை இல்லாததால் மக்கள் அவதி!

சென்னையில் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட பின்பு, கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் தெருக்கள் தகரம் கொண்டு அடைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அந்த தெருவின் இரு புறமும் கட்டைகள், தகரங்கள் கொண்டு அடைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து முன்பு பேனர் வைக்கப் பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், தெருக்களுக்கு பதில், தொடர்புடைய வீட்டின் நுழைவுப்பகுதி மட்டும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டது. அதன் பிறகு தொற்று குறையத் தொடங்கியதால், வீடுகளை தகரம் கொண்டு அடைக்காமல் அறிவிப்பு பேனர் மட்டும் கட்டப்பட்டது.

Also Read: “இதுதான் மக்களைக் காப்பதா?” - இதயநோயாளி வசிக்கும் வீட்டை பலவந்தமாக தகரம் வைத்து அடைத்த ஊழியர்கள்!

இந்நிலையில், சென்னையில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் தெருக்களை தகரம் கொண்டு அடைப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்கு மாம்பலம் ருக்மணி தெருவில் சுமார் 21 பேருக்கு தொற்று ஏற்பட்டதால், தெருவின் இருபுறமும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

இதனால், அத்தெருவில் வசிக்கும் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோடம்பாக்கம், வளசரவக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு அதை முறையாகச் செய்யாமல் தவறியதால், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Also Read: ஆளே இல்லாத வீட்டிற்கு தகரம் அடித்து கணக்குக் காட்டும் அரசு?: இ-பாஸ் ஊழலை அடுத்து இதிலும் உண்மை அம்பலம்!