Tamilnadu

‘மோடியின் சீக்ரெட் ஏஜென்ட், ஸ்லீப்பர் செல்’ : விமான நிலையத்தில் துப்பாக்கி நீட்டிய வாலிபர் - பதறிய போலிஸ்

மதுரை விமான நிலையத்திற்குள் நேற்றைய தினம் இரு சக்கர வாகனத்துடன் இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அப்போது, தான் வந்த இரு சக்கர வாகனத்தை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் விடாமல், பயணிகள் செல்லும் பாதையில் நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது, இளைஞரின் வித்தியாசமான நடவடிக்கையால் சந்தேகமடைந்த விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த இளைஞரை சோதனை செய்தபோது, அவரிடமிருந்து ஏர்கன் துப்பாக்கிகள் மற்றும் 4 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

அப்போது, இளைஞரிடம் இதுதொடர்பாக விசாரித்தபோது, தான் பிரதமர் மோடியின் பாதுகாவலர் என்றும் தனக்காக தனிவிமானம் காத்திருப்பதாகவும் விமானத்தில் ஏறிச்சென்று மோடியை காப்பாற்றப் போவதாகவும் சொல்லியுள்ளார்.

விமான பாதுகாப்பு அதிகாரிகள் மிரண்டுபோய் யார் என்று விசாரிக்க, இந்த நாட்டின் நன்மைக்காக போராடும் ஸ்லீப்பர்செல் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படைவீரர்கள், பெருங்குடி போலிஸாரிடம் தகவல் தெரிவித்து, தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில், அந்த இளைஞர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் அஸ்வத்தாமன் என்றும், அந்த இளைஞர் கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படையான என்.சி.சி-யில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சிறிது காலம் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வீட்டிற்குத் தெரியாமல், இரு சக்கர வாகனத்தில் மதுரை விமான நிலையம் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, பெருங்குடி போலிஸார் அந்த இளைஞரின் தந்தை பாஸ்கரனை நேரில் வரவழைத்து கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஏர்கன் துப்பாக்கிகள் வைத்திருந்தது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் போலிஸார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “அடிமைகளின் கொள்ளைவெறி உயிர்காக்கும் மாஸ்கிலும் தொடருவது பெரும் துரோகம்” - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!