Tamilnadu

ஆன்லைன் வகுப்பு: விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? கண்காணிப்பு அமைப்பை உருவாக்குக - சென்னை ஐகோர்ட் ஆணை!

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் எப்படி பின்பற்றப்படுகிறது? மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்? தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துவது தொடர்பாக நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், முன்கூட்டியே பதிவு செய்த வகுப்புகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட பள்ளிகள்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், மலைவாழ் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக கல்வி வழங்கப்படுவதாகவும், தனியார் தொலைக்காட்சிகள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் நலன் அனைவரின் பொறுப்பு என்றும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்க அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Also Read: அனைவருக்குமானது அல்ல ஆன்லைன் வகுப்புகள் என்பதை நித்தியஶ்ரீயின் மரணம் எடுத்துக்காட்டுகிறது: மு.க.ஸ்டாலின்